Thursday, July 9, 2009

ஓடிப்போனவள் - உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக

இந்தக் கவிதையை ஆதாரமாகக் கொண்டு...

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்
இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போனதன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி.

*********************************************

"தே.. பசங்க.. பஸ் ஸ்டாண்ட்ல கொஞ்ச நேரம் நிக்கவிடரானுங்களா.. " மனசுல
நினைச்சுக்கிட்டேன். என்னை, இங்க நிக்கறானே அந்தப் பய்யன் சொரன்டீட்டு இருக்கறதப் பாருங்க.18 வயசுதான் இருக்கும்.படிக்கற வயசுல ஏன் இப்படி புத்தி போகுது?..
மொதல்ல அந்தப் பக்கம் பார்ப்பான். அப்புறம் இந்தப் பக்கம் பார்குற மாதிரி என்னப் பார்ப்பான். ஏதாவது பஸ் வந்திச்சுன்னா பின்னாடி நகர்ர மாதிரி நகுந்து என்ன உரசுவான். கிட்டதிட்ட கால் மணிநேரமா இதயே செஞ்சுட்டிருக்கான். இவன யாருமே எதுவும் கேட்கமாட்டீங்களா?. 'நீ கூச்சல் போடலாமில்ல'ன்னு கேட்கறீங்களா.. என் தொழில் மட்டும் பாதிக்காத மாதிரி இருந்தா இவனையெல்லாம் உண்டில்லைன்னு பண்ணிருப்பன்.

என்னப்பத்தி சொன்னவாவது நீங்க ஹெல்ப் பண்றீங்களான்னு பார்கறேன் சார்.. என்னை பஸ் ஸ்டாப்லயோ, தெருமுனைலயோ இல்ல சில சமயம் கோவிலாண்டயோ பார்த்திருப்பீங்க .. ச்சே.. பிச்சைக்காரின்னு நினைக்காதீங்க சார்.. ஒரு விதமான சர்வீஸ் பண்றேன்னு நேனைசுக்கங்க. என்னை கதை, கவிதையில மட்டும் "விலைமகள் , தாசி" அப்படின்னு எழுதீட்டு, மத்தபடி "விபச்சாரி", "தேவடியா" அப்படின்னு என் காதிலவிழற மாதிரியே சொல்லுவாங்க.என் பேரு.. ம்ம்ம்ம்ம்.. ராணி சார். சுருக்கமா இருந்த ஞாபகம் இருக்குமில்ல. எவளோ ரேட்ன்னு அப்புறம் சொல்றேன். எனக்குன்னே ரெகுலர் கஸ்டமருங்க இருக்காங்க சார். அவங்களெல்லாம் நான் தேவிகா மாதிரியோ , சுகன்யா மாதிரியோ இல்ல ஸ்னேஹா மாதிரியோ இருக்கன்னு அவங்க வயசுக்கேத்த மாதிரி சொல்லுவாங்க. சில பேரு அவங்க கதை சொல்லுவாங்க. சில பேரு என்னோட கதையக் கேப்பாங்க. புருஷன் நொண்டி , சாப்பிடவே வழியில்லை , லவர் ஏமாத்தீட்டான் அப்படின்னு தோன்றத சொல்லுவேன். அவங்க என்னை சமாதானப்படுத்த தோள்மேல கைய்யப்போடுவானுங்க. ஆனா ரொம்ப தொந்தரவு கொடுக்கறது தண்ணியடிச்சிட்டு வரவனுங்கதான் சார்.. கெட்டகெட்டவார்த்தையில திட்டுவானுங்க.. அடிப்பானுங்க .. இன்னும் விபரீதமாவெல்லாம் செய்வாங்க .. சொன்னா வாய் கூசும். இப்போ ஒன்னு சொல்லியே ஆகுனும் சார். நம்பாளுங்கல்லாம் தனியா இருந்தா உறசுவானுங்க இதே கூட்டமா இருந்தா ஏதோ வேண்டா வெறுப்பா பார்ப்பானுங்க.

நான் உங்ககிட்ட பேசீட்டு இருக்கறப்போ அந்தப் பொறம்போக்கு ரெண்டுவாட்டி உரசினான். கொஞ்சம் தள்ளி நின்னு கண்ணடிச்சான். மறுபடியும் என் பக்கத்துல வந்து நின்னான்.

அப்போ இந்தப்பக்கத்துல இருந்து
"இந்த பஸ் தி-நகர் போகுமா?" ஒரு 50 வயசு ஆள் கேட்டான்.
"போகாது.. " சொன்னேன்
அந்த ஆளுக்கு நான் யார்னு தெரிஞ்சிருக்கணும்.
"நீங்க எங்க போகணும் ?" சிரிச்சப்போ, இருந்த இருபது சொச்சம் பல்-ல்ல இருந்த பான்பராக் கறை தெரிந்துச்சு.
"நுங்கம்பாக்கம். இங்கிருந்து தி-நகர்க்கு பஸ் கம்மி ".
"எனக்கு-ம் நுங்கம்பாக்கதுல ஒரு வேலை இருக்கு. நாம ஆட்டோ-ல போலாமா?"
"போலாம்".

நான் ஆட்டோல ஏறினேன். அந்த ஆள் தன்னோட பைய ஓரத்துல வச்சிட்டு என்ன நெருக்கி ஒக்காந்தான். அந்தப் பய்யன் என்னை பார்த்துட்டே படில தொங்கிட்டுப் போனான்.

"பேர் என்ன?"

"மாலா"

"அன்னிக்கு ராணி-ன்ன?" சிரிச்சான்.

"ஞாபகம் இல்ல" நானும் சிரிச்சேன்.

"ரேட் அதேதான இல்ல ஏறீருச்சா?"

"அதே ரேட் தான்."

"ஆள்தான் கொஞ்சம் வெயிட் போட்டுட்ட.."

அவன் வாய் மட்டுமில்லாம கையும் பேசிட்டே வந்திச்சு. ஆட்டோ டிரைவர் அடிக்கடி பின்னாடி வர்ற வண்டிகள கண்ணாடில பார்த்திட்டே வந்தான்.
ஆட்டோ ஒரு பங்களாவுக்கு பக்கத்துல நின்னுச்சு. அடையாருன்னு நினைக்கறேன். அடுத்த தெருவுக்கு நடந்து போய் இன்னொரு பங்களாக்குள்ள போனோம்.

ச்சும்மா சொல்லக்குடாது, பங்களாவ பாத்துபாத்து கட்டிருக்கான். ஸ்விம்மிங் பூலு, தோட்டம், மூணு காரு.

கதவ திறந்தவருக்கு ஒரு 55 வயசு இருக்கும். சின்ன வயசுல சுருட்டமுடி இருந்திருக்கும் போல.. இப்போ இல்லை. ஆள் நல்ல சிவப்பு. நெத்தீல பட்டை. தங்க வாட்ச். வெள்ளை வேஷ்டி, கட்டம் போட்ட சட்டை.. கண்டிப்பா இவர் தான் இந்த பங்களாவோட ஓனர். கொஞ்ச நேரம் எனக்கும்.

டிவி-ல எனக்கு ரொம்ப பிடிச்ச கார்ட்டூன். எலிய பூனை தொரத்தீட்டிருந்திச்சு.

என் கூட வந்தவன் சிரிச்சிட்டே தலைய சொரிஞ்சான். அவங்க ரெண்டு பெரும் வெளிய போயிட்டு கொஞ்ச நேரத்துல "என் ஓனர்" மட்டும் உள்ள வந்தாரு.

"உன் பேரு என்னம்மா?"

"ராணி". அவர் 'ம்மா' போட்டு கூப்பிட்டது பிடிச்சிருந்திச்சு..

"என்ன வயசு?"

"22 சார்.." அஞ்சு வயச கொறச்சு சொன்னேன்..

"எனக்கு அந்த வயசுல ஒரு பையன் இருக்கான்.. அமெரிக்காவுல .. " செவுத்துல இருந்த போடோவுல ஒரு பய்யனும் ஒரு வெள்ளைக்காரியும் சிரிச்சிட்டிருந்தாங்க.
பய்யனுக்கும் முடி கொட்ட ஆரம்பிச்சிருந்தது.

".. "

"நீ ட்ரிங்க்ஸ் சாப்பிடுவியா?"

"எப்பவாவது சார்.. கஸ்டமருங்க சொன்னா.."

"ப்ரிட்ஜ்ல இருக்கு. எடுத்திட்டு வா.. அப்படியே மிரிண்டாவும் எடுத்திட்டுவா.."

"இந்தாங்க சார்.. " பீரையும், மிரிண்டாவையும் அவர் முன் வைத்தேன்..

"உனக்குதான்.. சாப்பிடு"

"உங்களுக்கு சார்.."

"நான் சாப்பிட மாட்டேன்.."

பீர் கொஞ்சம் கசப்பா இருந்திச்சு. இனிமேல் பீர் தயாரிக்கும் பொது கொஞ்சம் சீனிய அல்லிப்போட்டானுங்கன்ன நல்லாருக்கும்.

"சார் கை கால் ஏதாவது அமுத்திவிடட்டான் சார்.. "

"அதெல்லாம் வேண்டாம்மா "..

".."

"நீ எப்படி இந்த தொழிழுக்கு வந்தே?" எல்லாரும் கேக்கற கேள்வீன்னாலும் அவர்ட்ட ஒரு அக்கறை இருந்திச்சு.

"தெர்ல சார்.. 13 வயசுலே வந்துட்டேன்.. ஒரு நாள் பொடவ கட்டி , பூவெல்லாம் வச்சு ஒருத்தனோட அனுப்புச்சாங்க.. அதுக்கப்புறம் பழகிடுச்சு.. " அவர்ட்ட உண்மைய சொல்லனும்னு தோணிச்சு..

"தப்பா தெரிலயா?"

"தெர்ல சார்.. சொன்னேன்ல பழகிடுச்சு.. மத்தவங்க என் முன்னாடியே கேவலமா பேசும்போதுதான் ஒரு மாதிரியா இருக்கும்.. "

"ஆனா நீ மத்தவங்களுக்கு எவ்வளவோ பரவாலம்மா.. bastards.. " தன் பய்யனோட போட்டோவப் பார்த்தார்..

என்ன சொல்றதுன்னு தெரியாமே நான் அவர்ட்ட போய் நின்னேன்..

"உனக்கு பட்டு புடவ கட்ட புடிக்குமா..?"

"புடிக்கும் சார்.. ஆனா எங்க தொழிலுக்கு எதுக்கு சார் புடவையெல்லாம்.. "

"அந்த ரூம்-ல பட்டுபோடவ இருக்கும்.. அதக் கட்டீட்டு அப்படியே நககல்லாம் இருக்கும்.. அதையும் போட்டுட்டு வா"..

ரூம்ல கட்டில்மேல புடவ, நகடப்பா எல்லாம் இருந்திச்சு.. நான் வரேன்னு அவர் எடுத்து வச்சிருக்கனம்.

அவர்மேல சாஞ்சு நின்னேன்... மனுஷன் ஒரு உணர்ச்சியும் காமிக்கல. என்னை உக்காரவச்சிட்டு நவுந்திட்டாரு...

"நீ இந்த புடவைல அழகாயிருக்க.. "

"சார் இப்ப வச்சுக்கலாமா.."

"ச்சேச்ச.. நீ சின்னப் பொண்ணு.. "

அப்போ போன் அடிச்சுது. திடீர்னு பேசீட்டு இருக்கும் போதே "நாயே, Bastard , முடிஞ்சதப் பண்றா" அப்படின்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு. போன்-அ வச்சிட்டு உக்காந்தவரு ஒரு சிகரட்ட பத்த வச்சாரு. சிகரட்ட கண்ணாலயே பத்தவச்சிருக்கலாம்.. கண்ல அவளோ தணல்..

"சார் எதாவது பிரச்சனையா சார்.." எனக்கு அவர அப்படி பார்க்க பாவமா இருந்துச்சு..

"ஒண்ணுமில்லம்மா.. தேவடியா பய்யன்.. என் மகன்.. கால் பண்ணான்.. சொத்தப் பிரிச்சு கேட்கறான்"

"சார் வொங்க பொண்டாட்டீயப் பேசச் சொல்லுங்க சார்.. எல்லாம் சரியாப் போய்டும்..

"அந்த முண்டைனாலதான் இவ்ளோ பிரச்சனையே.."

".. "

"என் தலைல பச்ச பிள்ளைய கட்டீட்டு அவ ஓடிப் போய்ட்டா.. அவன் தறுதலையா நிக்கறான். ஓடுகாலி நாயி. போகும் போதே பிள்ளைய கொன்னுட்டு போய் இருந்தா நான் நிம்மதியாவாவது இருந்திருப்பேன்.." அவர் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சு..

".."

"எவளோ பாசமா இருந்தேன். சொந்த அத்தை பொண்ணு. உனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லைன்னா சொல்ல வேண்டியது தானே.. அதவிட்டுட்டு எந்த மயிருக்கு பெத்த பிள்ளையையும் கட்டின புருஷனையும் விட்டுட்டு ஓடிப்போகனும்.. "

பொலம்பீட்டே இருந்தவரு திடீர்ன்னு குழுங்கிக்குழுங்கி அழ ஆரமிச்சிட்டார்.. என்னவோ மாதிரி ஆயிடுச்சு.. அந்த பொம்பளைக்கு எப்படி இப்படிப்பட்ட ஆம்பளைக்கு துரோகம் பண்ண மனசு வந்திச்சு.. பாவம் இருவது இருவத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்தத நினைச்சு இன்னமும் அழுதிட்டிருக்காரு...

கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு என் பக்கத்துல வந்தாரு. கைல சிகரெட். அப்போதான் பார்த்தேன்.. புடவைல நிறைய எடத்துல சிகரெட்டால சூடு போட்ட ஓட்டை.

Tuesday, June 30, 2009

பயணம் - உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக..

340L பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. மிகுந்த சிரமப்பட்டு, எனது பெரும் உடலை வருத்தி, இருபது மீட்டர் ஓடி ஏறிக்கொண்டேன். நடத்துனரை முறைத்தபடியே பயணச் சீட்டைப் பெற்றுகொண்டேன். அவன் அதை பொருட்படுத்தவில்லை. கிடைத்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ஏனோ பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன்.

*******************************************************

"உன்னை மாதிரி ஆளுங்கனால தாண்டா பூமியே அழியப்போகுது" என்று கூறி என் வாதத்தை வைத்தேன். அவன் என்னிடம் கேட்ட கேள்வி "ஏன்டா டெய்லி மாக்கன் மாதிரி பஸ்-ல போயிட்டு இருக்கே. சம்பாதிக்கற.. ஒரு பைக் வாங்கிக்கலாமில்ல.. சரியான கஞ்சண்டா நீ".
எனக்கு தெரியும் அவன் என்னை புரிந்துகொள்ள போவதில்லை. இது போன்ற வாக்குவாதங்கள் எங்களுக்குள் தினமும் நடைபெறும். லாகூர் குண்டுவெடிப்பில் தொடங்கிய எங்கள் விவாதம் பாகிஸ்தான் ராணுவம் , காஷ்மீர் விவகாரம் , இமயமலை , சிதோஷன மாற்றம், எரிபொருள் சிக்கனம் என்று பல உருவங்கள் மாறி இப்பொழுது நான் பேருந்தில் பயணம் செய்யும் மடத்தனத்தை பற்றி விவாதித்தோம். பல தலைப்புகள் மாறினாலும் எனக்கும் அவனுக்கும் இருக்கும் கருத்து வேற்றுமை மட்டும் அப்படியே பூரணமாக இருந்தது. அவன் - என் உயிர் நண்பன் சாமி. அலுவலகத்தில் சாம். சாமி என்னை விட மாதம் ரூ.5,000 குறைவாக சம்பாதிக்கிறான். ஒரு Karizma பைக்கும், மாருதி 800 காரும் வைத்திருக்கிறான். டாடா நானோவிற்கு முன்பதிவு செய்து காத்துக்கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர வேறு தகவல்கள் உங்களுக்கு தேவையற்றது. இக்கதை அவனைப்பற்றியதில்லை. நான் நந்தன். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தில் கணிப்பொறியாளன். எனது ஒன்றரை மாத சம்பளத்தில் ஒரு karizma வாங்கி விடலாம். என்னிடம் இருப்பது Gear cycle. சாமியின் பேச்சைக்கேட்டு என்னை கஞ்சனாக உருவகப்படுத்திவிடாதீர்கள். நான் ஒரு சுற்றுப்புறச்சூழல் பாதுகாவலன். நேற்றுகூட நீங்கள் என்னோடு என் அலுவலகத்துக்கு வந்திருந்தால் யாருமில்லாத அறைகளில் வீணாக எரிந்துகுண்டிருந்த 17 மின்விளக்குகளை நான் அணைத்ததை கண்டிருப்பீர்கள். இது போன்று மின்சாரத்தையும், பெட்ரோல்-டீசலையும், தண்ணீரையும், எந்த ஒரு இயற்கை வளத்தினையும் விரயம் செய்பவர்களை மாறுகை மாறுகால் எடுக்கவேண்டும். ம்ம்ம்ம்ம்ம்.. வேண்டாம்.. எதாவது ஒரு ஆப்பிரிக்காவின் வறண்ட கிராமத்துக்கு அனுப்பவேண்டும். . அல்லது இதே பூமியில் அவர்கள் 100 வருடங்களுக்கு பின் மீண்டும் பிறக்கவேண்டும். இயற்கை வளங்களை நாம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதாலேயே நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை மறுக்கிறோம். அதனாலயே மிக அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாமல் நான் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை. பைக்கில் 20 நிமிடத்தில் அடையவேண்டிய அலுவலகத்தை மூன்று பேருந்துகள் மாறி, ஒவ்வொரு நடத்துனரிடமும் இரண்டு ரூபாய் சில்லறையைப் பறிகொடுத்து அடைகிறேன்.

ஜனவரி மாத விடியல்நேர பெங்களூர் குளிரில் படுக்கையை விட்டு எழுவது சற்று சிரமமான காரியம. அன்று ஐந்து நிமிட தாமதத்தால் 340L பேருந்தை தவறவிட நேர்ந்தது. ஓட்டுனரின் சௌகரியதிற்கு ஏற்ப பேருந்துகளின் வருகை நிகழ்வது இந்திய நியதி போலும். அன்று என் நேரம்.. ஓட்டுனருக்கு கடமை உணர்ச்சியும் நேரம் தவறாமையும் ஏற்பட்டு எனக்கு சிக்கலை உண்டாக்கியது. இங்கே நான் வசிக்கும் கைகொன்றஹள்ளி பற்றியும் சொல்லியாக வேண்டும். அது ஒன்றும் பெங்களூரின் புறநகர் பகுதியில்லை. மேலும் இரண்டரை மைல் சென்றால் வருமே கசவனஹள்ளி அதுதான் புறநகர் பகுதி. கைகொன்றஹள்ளியில் பல குடியிருப்புகளும், பள்ளிகளும் , அங்காடிகளும் வந்தாலும் இன்னும் சீரான பேருந்து வசதியில்லை. அதனால் ஒரு பேருந்தை தவறவிட்டோமேயானால் அடுத்த பேருந்துக்காக மூன்று மணிநேரம் காத்திருக்கவேண்டும். எப்படியாவது ஹோச ரோடு சென்றுவிட்டால் அங்கிருந்து உடனே பேருந்தை பிடித்து அலுவலகம் சென்றுவிடலாம். பேருந்தை விட்டுவிட்டதால் ஆபத்பாந்தவனாக வரும் ஆட்டோவிற்காகக் காத்திருந்தேன். ஆபத்பாந்தவனுக்கு சேவைக் கட்டணம் அறுபது ரூபாய். மழைக்காலத்தின் போது அதுவே முந்நூறு ரூபாயாக மாறும். அடுத்த நாள் மழை பெய்யாது. அன்று எந்தவொரு ஆபத்பாந்தவனும் என் கண்களுக்கு தென்படவில்லை. சாலை பரபரப்பாகத் தொடங்கியது. வாகனங்களும் மக்களை போன்றவையே. பல வர்ணங்கள் . பல ரகங்கள் . உயரமாகவும் , குட்டையாகவும் , ஒல்லியாகவும் , குண்டாகவும் பல தோற்றங்கள். மனிதர்களை போலவே மதங்களாலும் பிரிக்கப்பட்டுள்ளன. சில தீவிர மதப்பற்று கொண்ட வாகனங்கள் "ஜெய் ராம் " என்றோ "Praise the lord" என்றோ தனது நெற்றியில் ஒட்டிக்கொண்டிருந்தன. தனது முன்னே போகும் போட்டியாளனை முந்தவேண்டும் என்று தனது சக்தி முழுவதையும் திரட்டி, மிகுந்த உறுமலுடன், மூச்சை இழுத்து விட்டுச்சென்று கொண்டிருந்தன.

நான் இருபது நிமிடமாக கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த பெண் கல்லுரி வாகனத்தில் ஏறிச்சென்று விட்டிருந்தால். பேருந்து நிறுத்தத்தில் நான், அழுக்கு வேட்டிகட்டி தோளில் மண்வெட்டி வைத்திருந்த முதியவர், அழுக்கு ஜீன்ஸ் போட்ட பரட்டைத்தலை இளைஞன் மற்றும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடுவயது ஆள் ஆகியோர் காத்திருந்தோம். நடுவயது ஆள் கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்திலும் "lift" கேட்டுக்கொண்டிருந்தான். நான் ஒதுங்கி நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற வெள்ளை நிற, மஞ்சள் போர்டு டாடா இன்டிகா, நடுவயது ஆள் கை காட்டியதைப் பார்த்தும் நின்றது. அந்த ஆள் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான். இளைஞனும், முதியவரும் ஓடிச்சென்று பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர். கார் புறப்படும் தருவாயில் நீண்ட யோசனைக்குப் பின் நானும் ஏறிக்கொண்டேன்.

காரின் டாஷ் போர்டில் விநாயகர் போன்ற ஒரு ஒரு சிலையும், தெலுங்கு mp3 குறுந்தகடும், இரண்டு லிட்டர் பெப்சி பாட்டிலில் அழுக்குத் தண்ணீரும் இருந்தது. முன்னிரவின் தூக்கமின்மையால் கார் ஓட்டுனரின் கண்கள் வீங்கி இருந்தது. நீங்கள் அவனைப் பார்த்தல் நிழல்கள் ரவியின் ஒன்று விட்ட சித்தப்பா மகன் என்று கட்டாயம் சொல்லுவீர்கள். ஓட்டுனரும் நமது நாடு வயது ஆளும் கர்நாடக அரசியலை மாட்லாடிக்கொண்டு வந்தனர். "குவார்டர்ஸ்" வந்ததும் அந்த நடுவயது ஆள் வண்டியை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் நூறு ருபாய் தாளை நீட்டிப் பல்லிளித்தான்.
டிரைவர் "பேட சார்.. சேன்ஜ் இல்லா.. நாளே.. " சொல்லி வண்டியை எடுத்தான்.
அடுத்த திருப்பத்தில் முதியவரும், இளைஞனும் ஆளுக்கு பத்து ருபாய் கொடுத்து இறங்கிக் கொண்டனர். சாலையோரத்தில் ஒரு பல மாடிக் கட்டிடம் உருவாகிக் கொண்டு இருந்தது. அவர்கள் கூலித் தொழிலாளிகளாக இருக்கலாம்.

டிரைவர் வண்டியை எடுத்தபடியே
"சாப் தூ கஹாந்?" என்றான்.
"ஹோச ரோடு" என்றேன்.
"சாப் வோ ஆத்மி.. டெய்லி.. " என்று ஹிந்தியில் ஏதோ சொன்னான். எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் ஒருவாரு புரிந்து கொண்ட சாராம்சம் இதுதான். அந்த நாடு வயது ஆள் தினமும் இப்படித்தான் நூறு ரூபாய்த் தாளை நீட்டுவான் என்றும் தன்னிடம் சில்லறை இல்லாதபடியால் வேண்டாம் என்று சொல்லி விடுவேன் என்றும் சொன்னான். ஓசியிலேயே வரும் இவனுங்களை எல்லாம் நடுவழியிலயே இறக்கி நடக்க வைக்க வேண்டும் என்றான்.
நான் சட்டைப் பையில் இரண்டு பாத்து ரூபாய் இருப்பதை உறுதி செய்துகொண்டு,
"இஸ் ஆத்மியோன் கோ ஐசா ஹி கர்நா ஹை" என்று ஆமோதித்தேன்.
"லேகின் வோ தோ போலீஸ் ஹை சாப்.. மா கி ***" என்றான்.
எனக்குத் தெரிந்த ஹிந்தி வார்த்தைகளை உபயோகப்படுதிவிட்ட திரிப்தியில் நான் மௌனமானேன்.

சில நொடி அமைதிக்குப் பின்,
" க்யா நாம் ஹை சாப்? ".
"நந்தன்"
"அந்த்ரவா சார் ?"
"நஹி.. தமிழ்நாடு "
"சார்.. நம்ப நேட்டிவ்வும் தமிழ்நாடுதான் சார்.. கிஷ்ணகிரிக்கு பக்கத்துல.ஆனா பெங்களூர்ல செட்டில்லாகி முப்பது வர்சமாச்சி சார்"
"பேரு என்ன? "
"பைலப்பா சார். எட்டு வர்சமா கேப் ஒட்டினுர்க்கன். அதுக்கு முன்ன லாரிக்கு போயிற்றுந்தேன் சார்.. "
எனது அடுத்த கேள்விக்கான பதிலையும் சேர்த்து சொன்னான்.
"ம்ம்ம்.."
"சார் நீ என்ன சார் பண்றே ? IT கம்பெனியா?"
"அமாம். . எலேக்ட்ரோனிக் சிட்டில ".
"சார் நானும் EC- தான் சார் போறேன்.. எந்த கம்பெனி சார்.. இன்போசிஸா சார்.. என் ஊடு அதுக்கு அந்தாண்டதான் சார் இருக்கு ".
வாக்கியத்தின் தொடக்கத்திலோ , முடிவிலோ மத்தியிலோ அல்லது அணைத்து இடங்களிலும் "சார்" வைத்தான்.
"இன்போசிஸ் பக்கத்துலதான் என் ஆபீஸும் ".
"சார் இன்ன சம்பளம் சார்?"
"12000 " பொய் சொன்னேன்.
"இப்போ ஒரு அம்மாவை ட்ராப் பண்ணிட்டு வர்றேன் சார்.. அதுக்கு ஒரு லட்சம் சம்பளம்.. சார்"
அவனே தொடர்ந்தான் .
"அந்த அம்மாவ நான்தான் சார் டெய்லி ட்ராப் பண்ணுவேன்.. பேரு மீனாட்சி குல்கர்னி சார்.. ரெண்டு பசங்க. ஆனா பார்த்தா அப்படித் தெரியாது".
எப்படித் தெரியாது என்று நான் கேட்கவில்லை. இன்போசிஸ் நெருங்கி வந்திருந்தது.
"சார் டெய்லி இந்தப் பக்கமா தான் சார் வருவேன் .. உங்களை டெய்லி பிக்-அப் பண்ணட்டான் சார்?"
" வேண்டாம்ப்பா.. நான் பைக்ல தான் போவேன். இன்னைக்கு பைக் பன்க்ட்சுர் அதான்.." பொய் சொல்லி இருபது ரூபாய் கொடுத்தேன். மீதி ஐந்து ரூபாய் கொடுத்தான். பேருந்தில் சென்றிருந்தால் முப்பது ரூபாய் ஆகியிருக்கும்.

அடுத்த நாள் வழக்கமான நேரத்துக்குத் தயாராகியிருந்தாலும் அரை மணிநேரம் டீவி பார்த்துக் கிளம்பினேன். அந்த பிரபலமான நடிகையின் அங்கங்களை வெளிப்படுத்தும் பாடலை ஒரு தந்தை தனது பெண்ணின் பிறந்தநாள் வாழ்த்தாக "dedicate" செய்திருந்தார். நடனம் நன்றாகவே இருந்தது. பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது முதல்நாள் பார்த்த கல்லுரி மாணவி அங்கு இல்லை. நான் , முதியவர் மற்றும் ஜீன்ஸ் இளைஞன் நின்றிருந்தோம் . எதிர்பார்த்தபடியே பைலப்பாவின் கார் வந்தது. நின்றது. இளைஞன் ஓடிச் சென்று முன்னிருக்கையில் அமர முனைகையில் அவனை பின்னிருக்கையில் அமரும்படி சொன்னான். நான் முன்னே அமர்ந்தேன். இளைஞனின் விரோதப் பார்வை என் மேல். ஏன் பைக்கில் செல்லவில்லை என்று அவன் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் இறங்கியபின் பைலப்பா பேச்சைத் தொடங்கினான்.
"நந்தா சார்.. இவனுங்கள இனிமேல் வண்டீல ஏத்த வேண்டாம்ன்னு பார்கறேன் சார்" (எனது பெயரை நினைவில் வைத்திருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை)"
ஏன்?"
"வண்டியை கலீஜ் ஆக்கீரனுங்க சார். என் முதலாளி எனக்கு டோஸ் கொடுக்கறான்..
குளிக்கரானுன்களோ இல்லியோ டெய்லி குடிப்பானுங்க சார்"
"நீ குடிக்க மாட்டியா?"
"எப்பவாவுது சார்.. குடிச்சா குடும்பத்த எப்படி சார் காப்பாத்துறது.. பய்யன் ஒன்னாவது படிக்கறான்.."
"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? பார்த்த தெரியல.."
"அது அப்போவே ஆயிடுச்சு சார். . பெரிய கதை.. " ஒரு கையை பின்னே சுழற்றி எப்போவே என்று உணர்த்தினான்.
"காதல் கல்யாணமா ?"
"பக்கத்துக்கு வீட்டுப் பொண்ணு சார்.. பழகீட்டு இருந்தோம்.. திடிர்னு கர்பமாயிட்டா. அதனாலே கல்யாணம் கட்டிகிட்டேன்" சொல்லிச் சிரித்தான்.
இவன் ஒன்றும் செய்யாமல் எப்படி அவள் திடீரென்று கர்ப்பமாவாள் என்று நினைத்து கொண்டேன்.
"அப்போ கல்யாணமானவிடனே குழந்தை பொறந்துருச்சா?"
"இல்ல சார் அது கலஞ்சு போச்சு. இது ரெண்டு வருஷம் கலிச்சு பொறந்தது. சார் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
"இல்லப்பா.."
"உனக்கு என்ன சார்.. கூட வேலை பாக்குற பொண்ணுங்க எல்லாம் கொழுக் மொழுகக்னு சேட்டு பொண்ணுங்களா இருக்கும்."
"அப்படில்லாம் ஒன்னும் இல்லை.. "
"சார்.. உனக்கு தெரியாது சார்.. நான் பார்க்குறேன் இல்ல.செம கம்பெனி கொடுப்பாங்க சார்."
"நான் அதெல்லாம் கண்டுக்கறதில்ல. உனக்கு அந்த மாதிரி இருக்கா?"
"ஒருத்திய வச்சிருக்கேன் சார். எப்போவாவது சார். பாமிலிய பாத்துக்கணும் இல்ல"

கொஞ்சம் கொஞ்சமாக பைலப்பா எனது ஆஸ்தான சாரதியாகிவிட்டான். அவன் பெலண்டுர் வந்ததும் எனக்கு மிஸ்டு கால் கொடுக்க, நான் புறப்பட்டு பேருந்துநிலையம் வந்து நின்றுவிடுவேன். ஓரிரு நிமிடங்களில் வந்துவிடுவான். தினமும் நடிகைகளைப் பற்றி, திரைப்படங்களைப் பற்றி, தெரு நாய்களைப் பற்றி என்று ஏதாவதொன்றைப் பற்றி பேசிக்கொண்டே வந்தான். பேச்சும் சுவரஸ்யமாகவே இருக்கும். பேச்சைக்கொண்டே அவன் பெண்களை வசியம் செய்திருக்கவேண்டும்.

ஒரு நாள் எனது அலுவல் சம்பந்தமாக சீக்கிரம் செல்ல வேண்டியிருந்ததால் அடுத்த நாள் வரப்போவதில்லை என்று கூறினேன்.
"பைலப்பா நாளைக்கு வர வேண்டாம் "
"ஏன் சார்?"
"நாளைக்கு ஆறு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும் .. கொஞ்சம் வேலை இருக்கு"
"எத்தன மணிக்கு கிளம்புவே சார்?"
"5:30க்கு கிளம்புவேன்.. உனக்கு எதுக்கு சிரமம் "
"என்ன சார் இப்படி சொல்றே . . பிரிண்ட்ஷிப்ல என்ன சார் சிரமம்".
அடுத்த நாள் 5:15 க்கு மிஸ்டு கால் வந்தது.

இந்த சம்பவத்துக்குப் பின் அவன் எனது அத்யந்த நண்பனான். சேவகன் என்றே சொல்லலாம். நான் எதைச் செய்ய சொன்னாலும் செய்யக் காத்திருந்தான். ஒரு முறை என்னிடம்
"சார் சடுர்டே MG ROAD போலாமா சார்.. கலக்கலா இருக்கும்" என்று கூறி கண்ணடித்தான்.
மற்ற பெண்களின் மேல் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் தனது குடும்பத்தை நன்றாகவே வைத்திருந்திருக்க வேண்டும்.

"சார், பேக்கரி போயிட்டு போலாம் சார்.. பய்யனுக்கு கேக் வாங்கணும்.."

"சார், அந்த படமா சார்.. போர் சார்.. நேத்திக்குத்தான் என் பொண்டாட்டியோட போய்ப்பார்த்தேன்"

"சார் இந்தா சார்.. சாபிட்டுப்பார் சார்.. நானே பண்ணது.. பொண்டாட்டிக்கு ஒடம்பு செரில சார் அதான்.."

பைலப்பா, வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பூரணமாக வாழ்பவனாக இருந்தான்.
"அதெல்லாம் சுத்த பேத்தல் சார்.. நாம நம்ம லைஃப்ப என்ஜாய் பண்ணனும் சார்.. நூறு வருசத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு யாருக்கு சார் தெரியும்".
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை எளிமையாகவே பார்த்தான்.
"சார் ஒரு சின்ன அக்சிடென்ட் சார்.. நாலு பேர் அவுட்.."

ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக சோர்ந்து காணப்பட்டான். வண்டியும் ஊர்ந்து வந்தது.
"என்ன பைலப்பா டல்லா இருக்க?"
"பாமிலில ப்ராபளம் சார்.. என்னோட செட்-அப் பத்தி அந்த ராட்ச்சஷிக்கு தெரிஞ்சிருச்சு சார்" மனைவியைக் குறிப்பிட்டான் ..
"......."
"நேத்திக்கு வேலைக்குப் போக விடாம ஒரே சண்டை சார்.. நான் அவளை ராணி மாதிரி வச்சிருக்கேன் சார்". கண்ணீர் வெளிவராமல் இமை தடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் உபரிநீர் வெளியேறியது.
"......"
"பய்யனுக்கும் ஒரே காய்ச்சல்.. வாந்தி..சார்"
"டாக்டர்ட்ட காமிச்சியா ?"
"காமிச்சேன் சார்.. வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு டாக்டர் இருக்காரு சார்.. மருந்து எழுதி கொடுத்திருக்காரு.. சார்".
ஒரு மருந்துக்கடை ஓரம் வண்டியை நிறுத்தி..
"ஒரு நிமிஷம் சார்..மருந்து வாங்கீனு வந்துர்ரன் .."
"சரிப்பா.." கடிகாரத்தைப் பார்த்தேன்.. இன்னும் நேரம் இருந்தது.
திரும்பி வந்தவன்
"சார் ஒரு 200 ரூபாய் இருக்குமா சார்.. என் பர்ஸ வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டன் சார்.."
பணத்தை தேடுவது போல தேடி 500 ரூபாய்த் தாளை மறைத்து 200 ரூபாய் கொடுத்தேன்.
"ரொம்ப தேங்க்ஸ் சார்.. பய்யனுக்கு மருந்து சார்"
"பரவாலப்பா .."

அடுத்த நான்கு நாட்கள் அவன் வரவில்லை. அவன் வராததால் ஆட்டோ பருந்துகளுக்கு இரையாகிப் போனேன். அவனது செல்பேசியில் அவனை அழைக்க என் மனம் ஏனோ இடம் தரவில்லை. கண்டிப்பாக மனைவியுடனான அவனது சண்டை முத்தியிருக்க வேண்டும். அவனை சில நாட்களுக்காகவாவது பிற பெண்களின் சகவாசங்களை விட்டுவிடச் சொல்லலாம் என்றிருந்தேன். அவன் என்னிடம் தொடர்பு கொண்டு அறிவுரை கேட்காமல் இருந்ததில் எனக்கு அவன் மேல் மிகுந்த வருத்தம்.

நேற்று , ஐந்து நாட்களுக்குப் பின் அவனிடம் இருந்து மிஸ்டு கால் வந்தது. நான் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அவனுக்காகக் காத்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைப்பு. இம்முறை அழைப்பை ஏற்றேன் .
"ஹலோ.. "
"ஹலோ சார்.. பைலப்பா பேசறேன் சார்.." குரல் கம்மியது.
"சொல்லு பைலப்பா.."
" சார்.. எனக்கு வேலை போய்டுச்சு சார்.." அழுதேவிட்டான் .
"ஏன் என்ன ஆச்சு ?"
"நாலு நாள் லீவ் போட்டதுனாலே வேற ஒரு டிரைவர வேலைக்கு வச்சிட்டான் சார் ஓனர்"
"விடு பைலப்பா.. வேற எடத்துல வேலை கிடைக்கும்"
"அதில்ல சார்.. எம்.. எம் பய்யன்- க்கு மஞ்ச காமாலை சார்.. ரொம்ப சீரியஸா -" வார்த்தை தடுமாறியது.
"கண்டிப்பா குணமாயிடுவான். நீ கவலைபடாதே. எந்த ஆஸ்பத்ரீலா சேர்த்திருக்க?"
"மணிபால்-ல சார்.. பய்யன் நோஞ்சான் மாதிரி ஆயிட்டான் சார்.. எத சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கறான் சார்.. எதேதோ டெஸ்ட் எடுக்கணுங்கறாங்க சார்.. என் பய்யன நீங்க தான் சார் காப்பாத்தனும் .. " தொடர்ந்து அழுதான்.
"எவளோ வேணும் பைலப்பா?"
"சார் ஒரு 5,000 இருந்தா போதும் சார்.. என் பய்யன எப்படியாவது காப்பாத்திடுவேன் சார்.."
"பைலப்பா நீ எனக்கு நாளைக்கு போன் பண்றியா.. நான் சொல்றேன்.."
"சார் ப்ளீஸ் சார்.. கண்டிப்பா கொடுத்துடுவேன் சார்.. நம்புங்க சார்.. கண்டிப்பா.."
"அதில்ல பைலப்பா மாசக் கடைசி அதான்.. நீ நாளைக்கு போன் பண்ணு.. நான் சொல்றேன் "
"சார்.. சார்... ."
"பைலப்பா எனக்கு நீ பேசுறது ஒழுங்கா கேக்கல.. நீ நாளைக்கு கால் பண்ணு.. நான் சொல்றேன்" என்று வைத்தேன்.

இன்று, 340L பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. மிகுந்த சிரமப்பட்டு எனது பெரும் உடலை வருத்தி இருபது மீட்டர் ஓடி ஏறிக்கொண்டேன். நடத்துனரை முறைத்தபடியே பயணச் சீட்டைப் பெற்றுகொண்டேன். அவன் அதை பொருட்படுத்தவில்லை. கிடைத்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
*******************************************************

Monday, June 29, 2009

படித்ததில் சிரித்தது -1

CORPORATE LESSON #1
A man is getting into the shower just as his wife is Finishing up her shower when the doorbell rings. After a few Seconds of arguing over which one should go and answer the Doorbell, the wife gives up, quickly wraps herself up in a towel and runs downstairs. When she opens the door, there stands Bob, the next door Neighbour.
Before she says a word, Bob says, "I'll give you $800 Just to Drop that towel that you have on". After thinking for a moment, The woman drops her towel and stands naked in front of Bob. Bob has a close look at her for a few seconds, hands over $800 and quietly leaves. Confused, but excited about her good fortune, the woman wraps back up in the towel and goes upstairs.
When she gets back to the bathroom, her husband asks from the shower "Who Was that?"
"It was Bob the next door neighbour," she replies.
"Great" the husband says, "Did he say anything about the $800 he owes me?"

MORAL OF THE STORY:
Share critical credit information with your Stakeholders to prevent avoidable exposure‼

SSLC பரிட்சைகள் ரத்து.

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல், SSLC தேர்வுகளை ரத்து செய்வதைப்பற்றி தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பில் ஒரு மாணவன் பெறும் மதிப்பெண் அவனது வாழ்வினை நிர்ணயிக்கும் சக்தியாக கருதப்படுவது மிகப்பெரிய அபத்தமாகும். நன்றாக படிக்கும் மாணவன் தனது பள்ளியில் தன் உயர் ஸ்தானத்தை தக்கவைக்கவும், 1000 / 2000 பரிசினை பெறவும், "மீண்டும் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்" என்ற தலைப்பு செய்தியை தவிர வேறு பயன்கள் எதுவும் இல்லாத தேர்வு இது. அதே சமயம், சுமாராகவோ படிக்கும் அல்லது சுத்தமாக படிக்காத மாணவனின் இளமனதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க செய்கிறது. இதை பற்றிய விரிவான கட்டுரை பிறிதொரு நாளில்...

Sunday, June 28, 2009

அஞ்சலி

கடந்த வெள்ளியன்று அதிகாலை நண்பன் ஒருவன் தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி சொன்னான் "மச்சி மைகேல் ஜாக்சன் இறந்திட்டான்டா :(".. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்டிப்பாக மைகேல் ஜாக்சனின் இறப்பு செய்தி என் ஆழ்ந்த உறக்கத்தை கலைக்கக்கூடிய மிகப் பெரிய துக்க செய்தியாக எனக்குப்படவில்லை. பின் மாலை வேளையில் வேலை பளுவில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டு i-pod-ல் "Black or white" album கேட்ட போது தான், ஏன் இத்தனை பேர் சோகக்கடலில் மூழ்கி இருக்கின்றனர் என்று தெரிந்தது. இரவு கனவுகள் முழுதும் MJ நிறைந்திருந்தான்.. சோகம் என்னுள்ளும் புகுந்து கொண்டது..
இன்னொரு விஷயம்.. MJ இறந்ததை எனக்கு தெரியபடுத்திய நண்பனுக்கு ஆங்கிலம் தெரியாது.. சொந்த ஊர் மதுரை அருகில் ஒரு குக்கிராமம். தெரியப்படுத்தும் பொழுது அவன் கண்களில் கண்ணீர்..

Tuesday, December 4, 2007